ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் பயணமாக இன்று வடக்குக்கு வருகின்றார். அதிவிசேட பாதுகாப்புடன் இன்று பகல் யாழ்ப்பாணத்தில் அவர் வந்திறங்குகின்றார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின்போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கக் கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனுவை யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளது என்று நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தவத்திருவேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றம் நேற்றுமுன்தினம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு அமைய மனுவின் 8ஆவது பிரதிவாதியான தவத்திருவேலன் சுவாமிகள் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.