இலங்கை தமிழரசுக்கட்சியின் 17வது தேசியமாநாடு ஏற்கனவே திட்டமிட்ட தினங்களில் இடம்பெறும் என கட்சியின் பொதுச்செயலாளர்
ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் 2023ஆம் ஆண்டு மே மாதம் 5ம் நாள் நடைபெற்றது.
இதன்போது எடுக்கப்பட்டதீர்மானத்தின்படி தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27, 28ஆம் நாட்களில் என்,சி, வீதி உப்புவெளி, திருகோணமலை என்னும் முகவரியில் அமைந்துள்ள “ஜேக்கப் வீச் றிசோட்” எனும் மண்டபத்தில் நடைபெறும்.
குறித்த மாநாடு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும். மேற்படி மாநாட்டுக் கூட்டம் மு.ப.10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுமென்பதை கட்சி அமைப்பு விதியான 10(உ) இற்கு அமைவாக இத்தால் தெரியப்படுத்துகின்றேன். ”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. ”என கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.