வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா,
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்றைய தினம் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இதனையடுத்து வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டநிலையில், சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று (05) மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் திங்கள் கிழமைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார்.