ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை
உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவது மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தவறான பரிந்துரைகளைச் செய்வதைத் தவிர்க்கும் வகையில் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதிபதி திரு.சந்துன் விதானகே உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் செயலாளர் நாயகம் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராகி தேர்தல் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதில் தனக்கு பிரச்சினை இல்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எனது உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமையால் தான் சுயேட்சையாக இருப்பதாகவும், தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்மாதிரியான அரசியல் இயக்கத்திற்கான தேசிய இயக்கத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
18 அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தலைவராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் திறன் தமக்கு இருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் வலுவான நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை வலுப்படுத்துவதற்கு ஏதாவது பங்களிப்பை கோரினால் அதனை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.