அதிகம் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த எரிபொருள், மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் அவரது அரசுக்கும், நேரம் பார்த்து
சரியான “ஷெக் மேட்” வைத்திருக்கிறார் எதிக்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிருமதாச.
இலங்கை மின்சார சபையின் மின் விநியோகத்துக்கு எக்கச்சக்கமான கட்டணங்களை விதித்திருக்கையில், நேரம் பார்த்து அதற்கு இலக்கு வைத்து அடித்திருக்கின்றார் சஜித்.
எரிபொருள் விலை உயர்வு, பொதுவான விலைவாசி அதிகரிப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி மின் கட்டணங்களை கட்டுமட்டின்றி உயர்த்தியிருந்தார் அமைச்சர் காஞ்சன விஜயசேகர. இதன் மூலம் சில மாத காலத்துக்குள் ஐயாயிரத்து இரு நூறு கோடி ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபை, மறுபுறத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், கட்டண நிலுவுகளை செலுத்த இயலாமல், தடுமாறிப் போயிருப்போரின் 8 லட்சம் மின்விநியோகங்களைத் துண்டித்திருப்பதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் மக்களுக்கு நீதி வழங்கக் கோரி, எதிர்க்கட்சி தலைவர் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து முறையிட்டிருக்கின்றார். ஏற்கனவே நாட்டில் கடும் மழை பெய்து நீரேந்து பகுதிகள் எல்லாவற்றிலும் தாராளமான நீர் தேக்கமடைந்துள்ளது.
இதனால் பெருமளவு நீர் மின்சாரத்தை குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. எரிபொருள் விலை உயர்வு என்ற பெயரில் மின்கட்டணத்தை அதிக அளவில் உயர்த்தியது இப்போது தேவையற்ற விடயமாகிவிட்டது. இந்த அடிப்படையில் மின் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க வாய்ப்பு இருந்தும் அதனை அரசு செய்யாமல் இழுத்தடித்து வந்தது. அதற்கிடையில் நேரம் பார்த்து, சத்தம் சந்தடியின்றி, காய் நகர்த்திருக்கின்றார் சஜித்.
பெரிய ஆரவாரப்படுத்தாமல், திடுதிப்பென அவர் உயர்நீதிமன்றத்திற்குப் போய்விட்டார். இனிமேல், மின்கட்டணத்தை குறைக்கும்படி உயர்நீதிமன்ற உத்தரவிட்டாலோ அல்லது அரசு தானாகவே நினைத்து மின் கட்டணத்தைக் குறைத்தாலோ அதனால் பெயர் சஜித்துக்குத்தான்.
அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டமையால்தான் மின் கட்டணம் குறைக்கப்பட்டது என்று மக்கள் பேசுவர். மின் கட்டணத்தை குறைப்பது என்று அரசு முடிவு எடுத்தால், அதை நேரத்துடனேயே - திட்டவட்டமாக - உத்தியோகபூர்வமாக - குறைந்தபட்சம் நாடாளுமன்றத்திலாவது - அறிவிக்க வேண்டும். அறிவித்திருக்க வேண்டும்.
அதைச் செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தால், கடைசியில் இப்படி எதிர்க்கட்சித் தலைவர் உயர்நீதிமன்றத்திற்கு போனமையால்தான் வேறு வழியின்றி, மின் கட்டணத்தைக் குறைக்க இணங்கியுள்ளார்கள் என்று அரசு கெட்ட பெயர் எடுக்க வேண்டித்தான் நேரும்.
-காலைமுரசு