ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான
கடிதத்தை அவர், இன்றைய தினம் (09) சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.
மனசாட்சிக்கு இணங்கி, தான் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக, அவர் இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “சபாநாயகர் அவர்களே, நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை, உங்களிடமும் நாடாளுமன்றச் செயலாளரிடமும் கையளித்துள்ளேன். அதனை நீங்கள் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் நான் உட்பட எம்.பிக்கள் உரையாற்றும் விதம் பதிவு செய்யப்படுகின்றன. ரெகோர்ட் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த மைக்கில் பேசினால் மாத்திரம்தான் ஹன்சார்ட்டில் பதிவு செய்யப்படுமென்று நீங்கள் ஒருமுறை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறீர்கள்.
‘மக்கள் பக்கம் இருந்து யோசித்துதான் இந்த முடிவை எடுத்தேன். நானும் குற்றவாளி என்று மக்கள் நினைக்கிறார்கள், மனசாட்சிப்படி எனது அரசியல் நடத்தை எனக்கு தெரியும். என் குழந்தைகளை நினைத்து, மக்களின் சாபத்தை நினைத்து, இந்த முடிவை எடுத்தேன். மக்கள் ஆணையின் பேரில் நாடாளுமன்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நான் இந்த முடிவை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர், 2020 நாடாளுமன்றத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.