சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த நாட்டின் நீதித் துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நியாயம் கிட்டாத நீதிமன்றங்கள்கூட ஓரமாய்
பார்க்கப்பட்ட ஒரு சமூகமாக மலையக பெருந்தோட்ட சமூகம் இருந்து வருகிறது என வேலுகுமார் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த நாட்டின் நீதி துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நியாயம் கிட்டாத நீதிமன்றங்கள் கூட ஓரமாய் பார்க்கப்பட்ட ஒரு சமூகமாக மலையக பெருந்தோட்ட சமூகம் இருந்து வருகிறது.
“2021ஆம் ஆண்டில் மலையக மக்களின் சம்பளம் 1000 ரூபாவாக அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால் முதலாளிமார் சம்மேளனமானது அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதனை தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கினறது.
“2021ஆம் ஆண்டில் இருந்த விலைவாசிகள் இப்போது 3 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவு 3 மடங்கு உள்ளது. 2024இல் வட் வரி அதிகரிப்பினால் சந்தையில் பொருட்களின் விலை 20 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் 2021 இல் முன்மொழியப்பட்ட 1000 ரூபா சம்பளத்தை 2024இல் பெற்றுகொடுக்க முடியாது என்று முதலாளிமார் சம்மேளனம் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் காணப்படுகிறது.
“மலையக மக்களுக்கும் வாயும் வயிரும் உள்ளது. அவர்களுக்கு பசி உள்ளது. அவர்கள் ரோபோக்கள் அல்லர். ஆகவே அவர்கள் இந்த விலைவாசி உயர்வோடு 1000 ரூபாவோடு எவ்வாறு வாழ முடியும்? என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப வேண்டும்.
“அரசாங்கமும் அமைச்சரவையும் நடவடிக்கை எடுக்கும் வரைக்கும், மலையக மக்கள் பசியில் வாடி, பட்டினியில் வாடி, அவர்கள் உயிரோடு பிணமாக அலைந்து திரிந்து கொண்டு இருக்கக்கூடிய நிலைமையை நீங்கள் வைத்து இருக்கின்றீர்கள் என்பதை சொல்ல வேண்டும். ஜனாதிபதி 1700 ரூபா என முதலாளிமாருக்கு சொல்கிறார். இந்த 1700 ரூபாயில் வாழ முடியுமா? யார் இந்த 1700 ரூபாவை தீர்மானித்தது? வாழ்க்கைச்செலவுக்கு 1700 ரூபா போதுமா என்று கூட தெரியாதா?
“மலையகம் 200 என்ற நிகழ்வை மலையகத்தில் கொண்டாடினார்கள். இதன் மூலம் மலையக மக்களின் நீண்டகால பிரச்சினை தீர்க்கப்பட்டதா? எந்த பிரச்சினையும் இதுவரை தீர்க்கப்படவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.