1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போடுவதற்காக, ஒரு தரப்புக்கு மாத்திரம் வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் தனக்கு உடன்பாடு

இல்லை என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த “Gem Sri Lanka 2024” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (11) கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

“இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. எங்களிடம் எரிபொருள் இருக்கவில்லை. உரம் இருக்கவில்லை. உணவு கிடைப்பது சிரமமாக இருந்தது. 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது அனைத்தையும் நாம் மக்களிடம் மீளக் கொடுத்துள்ளோம். இப்போது அந்நியச் செலாவணி இருப்பதால், அதைச் செய்ய முடிகிறது.

“இந்த அன்னியச் செலாவணி நமது ஏற்றுமதி மூலம் பெறப்படுவதில்லை. உலக வங்கி போன்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து அவற்றைப் பெற்றோம். 2022ல் எங்களுக்கு தேவையான உரத்தை அமெரிக்க அரசுதான் வழங்கியது. ஆனால் எப்போதும் எமக்கு இதில் தங்கியிருக்க முடியாது. ஏனைய நாடுகளிடம் எப்போதும் உதவி கேட்க முடியாது. நமக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அதற்கு நாட்டின் பொருளாதாரம் தயார் படுத்தப்பட வேண்டும்.

“வாக்குறுதிகளை அளித்து இவற்றைச் செய்ய முடியாது. அந்நியச் செலாவணியை ஈட்டும் புதிய பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அது ஏற்றுமதி பொருளாதாரமாக இருக்க வேண்டும். இந்த சிறிய பிரதேசத்தில் இருந்து அதிக வருமானம் ஈட்டும் திறன் எமக்கு உள்ளது. ஒருபுறம் இரத்தினக்கல் தொழில் மூலம் வருமானம் கிடைக்கிறது.

“மேலும், சுற்றுலாத்துறை மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. ஒருபுறம் பேருவளை, அளுத்கம தொடக்கம் காலி வரையில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. இது உலகத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் நகரம். மற்றும் உலகத்துடன் போட்டியிடும் நகரம். நமது நாட்டின் ஏனைய பகுதிகளும் இப்படித்தான் திட்டமிடப்பட வேண்டும்.

“நாம் ஒரு நாடாக முன்னேறுவதாக இருந்தால், நமது முயற்சியின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும். ஆனால் பெறுபேறுகள் கிடைக்க வேண்டும். இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும். இது சிறிய வீதம் என்றாலும், கடந்த ஆண்டு இந்த நாட்டின் பொருளாதாரம் மறை 7% ஆக சரிந்திருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

“ஆனால் இப்போது படிப்படியாக முன்னேறி வருகிறோம். 2025 ஆம் ஆண்டில், அந்த பொருளாதார வளர்ச்சியை 5% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு, 7% - 8% பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் 05 வருடங்களில் நாட்டை மீட்டெடுக்க முடியும்.

“இன்று, நாட்டின் அனைத்து குடிமக்களும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். நாம் அனைவரும் நாட்டின் உண்மையான நிலைமையை புரிந்து கொண்டு முன்னேறினால் 02 வருடங்களின் பின்னர் இந்நிலையிலிருந்து விடுபட முடியும் என நான் நம்புகிறேன்.

“இவ்வாறு கட்டியெழுப்பப்படும் இந்நாட்டின் எதிர்காலத்தினால் நன்மை கிடைக்கப் போவது எனக்கல்ல. அந்த நன்மை இந்நாட்டு இளைஞர் சமூகத்திற்கே செல்கிறது. அந்த இளம் சமூகத்தின் எதிர்காலத்திற்காக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி