“1980ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு வந்து எமது நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்கு இனத்தின் விடுதலைக்காக வழங்கப்பட்டது. அதேபோல் நானும் ஓர் ஆயுதத்தை கேட்கின்றேன். அது பொருளாதாரம் என்னும் ஆயுதம்” என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், மூன்றாம் ஆண்டாக, 'தமிழ் வெல்லும்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, சென்னை வர்த்தக மையத்தில் அயலக தமிழர் தின விழா நடைபெற்று வருகின்றது.
58 நாடுகளில் இருந்து, தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் எனபலரது பங்குபற்றலோடு. மேலும் பல தமிழ் சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன் ஆரம்ப விழாவினை அமைச்சர் உதயநிதி ஸடாலின் தொடங்கி வைத்தார். அந்த மேடையில் சிறப்புரையாற்றிய போதே, சாணக்கியன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “எமது நாட்டின் ஜனாதிபதி கூட, தமிழ்நாட்டில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை வைத்துத்தான் இலங்கையை கட்டி எழுப்புவதர்க்கான திட்டத்தை வகுத்துள்ளதாகச் சொல்கின்றார். அவ்வாறான ஒரு நிலையில், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் நாம், தமிழக முதல்வரிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் கேட்பது உங்கள் சிறந்த ஆயுதமான பொருளாதரத்தை வைத்துக்கொண்டு ஈழத் தமிழர்களான எங்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்காலத்தையும் எமது மக்களின் அபிலாசைகளையும் எமது உரிமையையும் வென்றுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.