“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டால் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். அதேவேளை,
கட்சி மூலமாகத் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பேன்” என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கட்சித் தலைவரைத் தெரிவு செய்வதற்கு வாக்களிப்பது சிறந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை காரியாலயத்தில் நேற்று கட்சி உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கட்சியில் இணக்கப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்தபோது சாத்தியப்படாது என்ற தீர்மானத்துக்கு அமைய ஜனநாயக ரீதியாக வாக்களிப்பதே சிறந்தது எனக் கலந்துரையாடப்பட்டுள்ளது. நான் கட்சியின் தலைவராக வருவேன் என யாராலும் கூற முடியாது.
“எனினும், கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டால் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணிகளை முன்னெடுப்பேன்” என்றார்.
“இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்யும் நோக்கில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இரா.சம்பந்தன் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இணக்கப்பாட்டுடன் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தனர்.
எனினும், இந்தப் பேச்சில இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை. இதையடுத்து வாக்களிப்பு மூலம் தலைவரைத் தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
-காலைமுரசு