எங்களை பட்டினி போட வேண்டாம். எங்களைத் தொட வேண்டாம் என்ற பதாதைகளை மாட்டில் தொங்கவிட்டவாறு இன்று (16)
திருகோணமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினால் குறித்த மாட்டுப்பொங்கல் கன்னியா பகுதியிலுள்ள பட்டியொன்றில் கொண்டாடப்பட்டது.
மிருக வதையை தடுப்போம், உங்களுக்கு உணவளிக்கும் எங்களை பாதுகாப்பது மனிதர் உங்களது கடமையாகும், எங்களது உணவை மறுப்பது உரிமை மீறலாகும் என்ற பதாதைகள் எழுதப்பட்ட பதாதையொன்றும் பட்டிக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
கன்னியா அகத்தியர் ஆதீனம் தம்பிரான் அவர்களினால் பூசை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை முன்னாள் நகர சபை உறுப்பினர் இலிங்கராசா மற்றும் திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினர், சிவில் சமூக அமைப்பினர் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் போது பண்ணையாளர்கள் பொங்கல் பானையில்6 கறுப்பு நிற துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டடு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலங்களாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் பூர்வீக பகுதிகளான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மாடுகளை மேச்சலுக்கு விடும் தமிழ் பண்ணையாளர்கள் சில சிங்கள இனத்தவர்களால் அச்சுறுத்தபடுகின்றனர்.
அதேவேளை, பொறி வைத்து பிடித்து கால்நடைகளை வெட்டும் செயற்பாட்டிலும் அத்து மீறிய குடியேற்றவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேச்சலில் ஈடுபடும் மாடுகளை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யும் அட்டூழியங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த அட்டூழியங்களுக்கும், காணி ஆக்கிரமிப்புக்கும் நீதி கோரி மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இதற்கான நிரந்தர தீர்வினை வழங்க அரசு தாமதித்து வருகிறது.
இந்தநிலையில், மக்களின் வாழ்வில் ஒன்றிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படும் பட்டிப் பொங்கலான இன்று பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் அட்டூழியங்களுக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மதத்தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.