ஐமச நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்த விவகாரம், கடந்த வாரத்தில் அதிக
கவனத்தை ஈர்த்த நிகழ்வாகப் பதிவாகியிருந்தது. ஐமச நாடாளுமன்றக் குழுவில் பலம்பொருந்திய உறுப்பினராக இருந்த சமிந்த விஜேசிறி வெளியேறியமைக்கான காரணம் தெரியாமல், கட்சியிலிருந்த பலரும் குழப்பமடைந்துள்ளனர். எவ்வாறாயினும், அவர் பதவி விலகுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
“நான் நாடாளுமன்றத்திற்கு V8 ல் வந்தேன். இன்று என்னிடம் V8 இல்லை. சமூகத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளால் எனது குழந்தைகளும் சில சமயங்களில் சபிக்கப்படுகிறார்கள். 225 பேரின் குழந்தைகளும் சபிக்கப்படும் நிலைக்கு இந்த நாடு வந்துவிட்டது. இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு இந்த அரசியலில் முன்னேறுவதா இல்லையா என்ற தீவிரமான கேள்வி எனக்கு இருந்தது. மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் என்ற பதவியை நான் ராஜினாமா செய்யும் கடிதத்தை உங்களிடம் கையளித்திருக்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் கடைசி அறிக்கையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தந்தையானார் என்ற தகவலையும் அவர் பகிரங்கப்படுத்தினார். அதன்படி, அவரது கதை ஹன்சார்ட்டில் பதிவிடப்பட்டது.
"இன்று, தந்தை ஸ்தானத்தைப்பெற்ற தகப்பனாக, அனைத்துக் ழந்தைகளையும் பராமரிக்கும் தலைவர் அவர். எனவே, எதிர்காலத்தில் எங்களுடைய குழந்தைகளையும் இந்த நாட்டின் குழந்தைகளையும் நீங்கள் கவனிப்பீர்கள் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் இந்த மரியாதை கொடுக்கிறேன். நீங்கள் இப்போது ஐந்து ஆறு ஏழு ஆகும்போது இரு்பதில்லை. அந்த நேரங்களில், குழந்தையைக் கொஞ்சி விளையாடும் தந்தையாக சஜித் பிரேமதாஸவைப் பார்க்கமுடியும்.”
நாடாளுமன்றத்தில் ஐமசவின் முன்னணி பேச்சாளராக இருந்த சமிந்த விஜேசிறி வெளியேறியமை தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. எம்பி பதவியை ஓராண்டுக்கு விற்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், “விஜேசிறியாக்கம்” என்ற புதிய வார்த்தை அரசியல் அகராதியில் சேர்ந்துள்ளது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இது தொடர்பில் மிகத் தீவிரமான கருத்தை வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் ‘விஜேசிறியாக்கம்” பற்றி பரவலாகப் பேசப்பட்டபோது, சமிந்த விஜேசிறியின் சார்பில் சரத் பொன்சேகா எம்பி முன்னிலையானார். “பட்டியலில் அடுத்து இருப்பவரிடமிருந்து 900 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டே பதவி விலகியதாக சபையில் கூறப்பட்டது. அவர் ஒருபோதும் பணத்துக்காக அரசியல் செய்யவில்லை என்பதை நான் இந்த சபையில் சொல்ல விரும்புகிறேன். அவர், வி8 ல் அரசியலுக்கு வந்தவர், தற்போது அல்ட்டோ காரில் செல்கிறார்’’ என சமிந்தவை பொன்சேகா வெகுவாக பாராட்டினார்.
“விஜேசிறியாக்கத்துக்கு” நாளாபக்கமிருந்தும் அடிவிழும்போது, ஃபொன்சேகா அவருக்காக முன்னிலையானமை தொடர்பிலும் ஒவ்வொரு கதைகள் எழுந்துள்ளன. ஃபொன்சேகாதான் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டுமென்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவர்களில், சமிந்த விஜேசிறிதான் முன்னிலையில் இருந்தாராம். அதனால்தான், இது விடயத்தில் ஃபொனி ஃபயராகியுள்ளாராம்.