உகண்டாவின் கம்பாலாவில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க, ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள குளோபல் தெற்கில் உள்ள நாடுகளின் பல தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கும் இடையிலான சந்திப்பில், அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் கலந்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான நெல்சன், நிமல் பியதிஸ்ஸ, குமாரசிறி ரத்நாயக்க, உதயகாந்த குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோர், இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கிங்ஸ் நெல்சன் எம்.பி, பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ, மொட்டுக் கட்சியைப் பிரதிநிதித்தி, நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவராவார். விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிச் செயலாளராகவும் உள்ளார்.
உகண்டா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க, மொனராகலை மாவட்டத்தில் இருந்து மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகாந்த குணதிலக்க, மொட்டுவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 10ஆம் திகதி 'மனசாட்சியின் பத்து பேர் கொண்ட குழு' என அறிவித்து ஆளும் கட்சியிலிருந்து வெளியேறியவராவார். அத்துடன், நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக டலஸ் அழகப்பெரும எம்.பிக்கு ஆதரவளித்து வாக்கெடுப்பில் கலந்துகொண்டவராவார்.