இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று
மாலை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.
இதன்போது மாவீரர்களின் நினைவுத் தூபிக்கு அவர் கார்த்திகை மலர் வைத்து பூஜித்ததுடன், அஞ்சலியும் செலுத்தினார்.
'ஈழத் தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக எனக்குரித்தாக்கப்பட்ட பொறுப்புக்களை உணர்ந்து, கொள்கை ரீதியில் ஒருமித்திருப்போரை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ள பலம்மிக்க பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஆரம்பிக்கின்றேன்' - வணக்க நிகழ்வின்போது சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
அதன்பின்னர் கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்கும் நிகழ்விலும், விசேட பூஜை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 74 வருட வரலாற்றில் முதல் முறையாக தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
சிறீதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவாக 137 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் தமிழரசுக் கட்சியின் மாநாட்டின்போது, சிறிதரன் தலைவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்வார்