“இலங்கை மக்கள் தற்போது ஆட்சியில் உள்ள அரசை அடியோடு வெறுக்கின்றார்கள். அரசியலில் அவர்கள் வரலாறு காணாத மாற்றத்தை
விரும்புகின்றார்கள். எனவே, மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் நேரில் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பு, நேற்று (23) பிற்பகல் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பில் அனுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையில் தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இலங்கையின் நடப்பு அரசியல் நிலைவரங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.