கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த
உயிரிழப்பதற்கு முன்னர் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
சமூக ஊடக செயற்பட்டாளர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருமணமான மனமகன் இது தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டு தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
“மாமா சனத் நிஷாந்தவுக்கு என்ன நடந்தது என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. எனக்காக…. என்னைப் பார்க்க வந்த பயணத்தில்.இந்த சம்பவம் நடந்தது என்பதனை நான் எப்படி தாங்கிக் கொள்வேன். ஆத்மா சாந்தி அடையட்டும் மாமா” உன அவர் பதிவிட்டுள்ளார்.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சனத் நிஷாந்த இன்று அதிகாலை 1.37 மணிக்கு தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
பேஸ்புக் பக்கம் ஒன்றினால் வெளியிடப்பட்ட வீடியோ காணொளி ஒன்றையே அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
"வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களைக் கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்" என்று அந்த வீடியோ பதிவு அமைந்துள்ளது.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்துக்குக் காரணமான பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப், முன்னால் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி பின்னர் வீதியின் அருகில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில், விபத்து தொடர்பில் கொள்கலன் பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜீப் வண்டி சாரதி தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், தற்போது இராஜாங்க அமைச்சர் உட்பட உயிரிழந்தவரின் சடலம் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள், உறவினர்கள் என பலரும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.