2025ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித்
சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அதற்காக மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவில்லை. வரிகளை அதிகரிக்கும் நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை.
“பொருட்களின் கேள்விகள் மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே அவற்றின் விலைகள் தீர்மானிக்கப்படும். எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
“இந்த சொத்து வரியானது நேரடியான வரியாவே உள்ளது. பெரிய சொத்துக்கள் இருக்கும் நபர்களிடம் இருந்து இந்த சொத்து வரி அறவிடப்படும். அத்தோடு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் டின் இலக்கம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
“ஆனால் இதில் பல பிரச்சனைகளை இனங்கண்டுள்ளோம். உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சில தொழில்நுட்ப சாதனங்கள் இல்லை. கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நீண்ட மீளாய்வுக் கூட்டத்தின் போது, இந்தப் பிரச்சினைகள் ஆராயப்பட்டன.
“குறிப்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குதல், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் பட்டதாரிகளை பணியமர்த்துதல் உள்ளிட்ட பல தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.