76ஆவது தேசிய சுதந்திரதின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகையின் போது கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம்
அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை (30) முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை இந்த போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், 3ம் திகதி மதியம் 2 மணி முதல் 4ம் திகதி வரை சுதந்திர தின விழா முடியும் வரையிலும் போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும்.
அதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான பகுதியும் பல கட்டங்களின் கீழ் நாளை (30) முதல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிவரை மூடப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட 675 வாகனங்கள் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 1ஆம் திகதி முதல் கொழும்பு நகரில் சிசிடிவி மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 22ஆம் திகதி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை கண்டுபிடிப்பதற்காக, பொலிஸாரினால் செயல்படுத்தப்படும் புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் 108 சிசிடிவி கமெராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.