ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதிவியிலிருந்து உடனடியாகப் பதவி விலகுமாறு, அக்கட்சியின் தலைவரும்
முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால், மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமத்திபால ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரை புதிய கூட்டணி அமைப்பதில் பயன்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயற்படும் போது, கட்சியின் கருத்துக்கு எதிராக செயற்பட்டு, அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாகக் கூறி, மஹிந்த அமரவீரவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார்.
வெற்றிடமாகியுள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு, திலங்க சுமத்திபாலவை நியமித்தார். இந்தத் தீர்மானத்துக்கு எதிராக, மஹிந்த அமரவீரவினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, பொதுச் செயலாளர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய கூட்டணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயர் பயன்படுத்தப்பட்டால் இருவரும் வெளியேறி புதிய பொதுச் செயலாளரை நியமிக்க வேண்டும் எனவும் அதற்கமைய மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமரவீர மற்றும் சுமதிபால இருவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.