பாண் ஒன்றிற்கு தேவையான எடை இல்லாத பட்சத்தில், விற்பனையாளர்களுக்கு 10 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தண்டப்பணம்
அறிவிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
பாண் ஒன்றின் எடையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபை நேற்றையதினம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதன்படி, ஒரு இறாத்தல் பாண் ஒன்றின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஒரு இறாத்தல் பாணிற்கான நிகர எடையில் 13 கிராம் வித்தியாசம் மாத்திரமே காணப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரை இறாத்தல் பாண் ஒன்றின் எடை 225 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அரை இறாத்தல் பாணிற்கான நிகர எடையில் 9 கிராம் வித்தியாசம் மாத்திரமே காணப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நடைமுறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறில்லாத பட்சத்தில் விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரு பாணின் எடை மற்றும் அரை பாணின் எடையை குறிப்பிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஒரு பாணின் எடை 450 கிராம் எனவும், அதிகபட்சமாக 13.05 கிராம் எடையைக் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரை பாணின் எடை 225 கிராம் இருக்க வேண்டும் என்றும், குறைக்கக்கூடிய அளவு 09 கிராம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.