ஒரு வருடத்தில் பதிவாகும் குழந்தைப் பருவ புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதென, கொழும்பு லேடி ரிட்ஜ்வே
சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
ஒரு வருடத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இதற்கு முன்னர் 450 ஆக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாவதன் காரணமாக உடல் உழைப்பு இல்லாததும் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என தெரிவித்த விசேட வைத்திய நிபுணர், இன்று சிறுவர்களிடையே இரத்தப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
நோய்களில் இருந்து விடுபட குழந்தைகளை இனிப்பு பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் இருந்து விலக்கி வைப்பது முக்கியம் என்றும் குறிப்பாக குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் தாய்ப்பால் கொடுப்பது புற்றுநோயில் இருந்து விடுபட நல்ல வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்றுள்ள உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வருடத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 3 தசாப்தங்களில் உலகெங்கிலும் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே புதிதாகப் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.