முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (05) தனது அமைச்சுப் பதவியை
இராஜினாமா செய்யவுள்ளதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், அவரை பதவி விலகுமாறு நேற்று (04) நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை, பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி 03ஆம் திகதி உத்தரவிட்டது.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கடந்த பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி, நோய் எதிர்ப்பு ஊசி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகச் சென்ற போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெஹலிய ரம்புக்வெல்ல, வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே, அவரது பதவி விலகத் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சுற்றாடல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார்.
கெஹலிய அமைச்சரவையில் தொடர்ந்தும் நீடித்தால் அது எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச அதிகாரியொருவர் நிதி மோசடி, பயங்கரவாத செயல் உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அவரது பணி இடைநிறுத்தப்படும்.
கெஹலிய அமைச்சரவையை பிழையாக வழிநடத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக சட்ட மா அதிபர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது பொருத்தமாகாது என அறிவித்துள்ளார்.
மேலும்,கெஹலிய தொடர்ந்தும் அமைச்சரவையில் அங்கம் வகித்தால் சர்வதேச ரீதியில் இலங்கை அமைச்சரவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என நிபுணத்துவ மருத்துவர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.