1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“இலங்கையில் தற்போது பொலிஸ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. ரணில் - ராஜபக்ஷக்கள் தலைமையில் காட்டாட்சியே

நடைபெறுகின்றது. தேர்தல் ஒன்றை இந்த அரசு நடத்தினால் வாக்குகள் மூலம் மக்கள் நிச்சயம் பதிலடி வழங்குவார்கள். இதனாலேயே தேர்தல்களை நடத்த இந்த அரசு அஞ்சுகின்றது” என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்தியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் சமூக,பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களுடன் தொடர்பான பல்வேறு விடயங்களை இந்தச் சந்திப்பின்போது இருவரும் பரிமாறிக்கொண்டனர்.

தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கை குறித்த விடயங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தியத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார். நியாயமற்ற முறையில் அரசு விதித்த பெறுமதி சேர் வரியால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உழைக்கும் மக்களின் ஊழியர்சேம நிதியங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதகமான விளைவுகளின் தாக்கம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது இந்தியத் தூதுவருக்குத் தெளிவுபடுத்தினார்.

தற்போதைய அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்த விடயங்களையும் இந்தியத் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திட்டமிட்ட திகதிகளில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் வேண்டுமென்றே ஒத்திவைக்கப்பட்டு வருவதான விடயங்கள் குறித்தும் இங்கு எதிர்க்கட்சித் தலைவரால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதுதவிர இந்த வருடம் தேர்தல் வருடமாக அமைந்திருந்தாலும் தற்போதைய அரசு நிகழ்நிலை காப்பு என்ற சட்டத்தை நிறைவேற்றி, மக்களின் கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை, தகவல் அறியும் உரிமை என்பவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

சமூக ஊடக வலையமைப்புகளை முடக்க மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த இந்தச் சட்டத்தால் முடியும். தேர்தல் வருடத்தில் இவ்வாறான சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் தேவையற்ற தலையீடுகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது மேலும் சுட்டிக்ட்டினார்.

இந்தச் சந்திப்பில் இந்திய பிரதித் தூதுவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி