இன்று (07) ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்படும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என, கெஹலிய ரம்புக்வெல்ல
தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று, வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயினும், ஏனைய நாட்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாடாளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு, சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படும் போது அவர்களை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வழமையான நடைமுறையாகும்.
தரமற்ற மருந்துக் கொள்வனது தொடர்பான விசாரணை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.