ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான ஆசீர்வாதத்துடன்தான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க
இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ள நிலையில், தனக்கும் அதேபோன்றதொரு வாய்ப்பு வேண்டுமென்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட அவரது குழுவினர் அதிபரின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் மக்கள் விடுதலை முன்னணியினர், இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்து விடுபட்டு நடைமுறைக்கு ஏற்றாற்போல் செயற்பட முனைவது வரவேற்கத்தக்கது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன். மக்கள் விடுதலை முன்னணியின் மாற்றம் மகிழ்வுக்குரியது எனவும், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு வாய்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாடியுள்ளது.
ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ள அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தது.
தேர்தலுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி, இந்தியாவில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அரசியல் ஆதாயத்தை நோக்கமாக கொண்டு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அதனை கோரியுள்ள நிலையில் அதற்கு இந்தியாவும் சாதகமாக பதிலளித்துள்ளது.
தென்னிலங்கை அரசியலில் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒருவரையொருவர் விஞ்சும் அளவுக்கு போட்டி நிலவும் நிலையில், இந்திய அதிகாரிகளுடன் முதலில் கலந்துரையாட தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலை தெரிவித்துள்ளது.