ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையானது நாட்டின் பொருளாதாரத்தை மையப்படுத்தியே அமைந்திருந்தது. தமிழர்களுக்கு எதிராக
இடம்பெறும் அநீதிகள் பற்றி முன்வைக்காதது வருத்தளிப்பதாக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“தமிழர்களுக்கு இனரீதியாக பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது. மத கலாசாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிடாதது வருத்தமளிக்கின்றது.
“2 மில்லியன் மக்களுக்கு காணி உறுதி பாத்திரங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டு இருந்தார். இங்கே காணி பத்திரம் வழங்கப்படும் நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் சில மக்கள் காணிகள் அபகரிப்பிற்கு உட்பட்டுக்கொண்டிருந்தமை முக்கியமான விடயம்.
“மேலும், யுத்தம் ஏற்பட்டபோது பலர் அரசியல் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டனர். இருந்தும் பலர் ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இன்னும் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். இராணுவமயமாக்கப்பட்ட தனியார் நிலங்களை மீண்டும் உரியவர்களுக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.