தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
வஜிர அபேவர்தன, அநுரகுமார திசாநாயக்கவின் கட்சி, தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள வஜிர கூறியுள்ளதாவது,
“தேசிய மக்கள் சக்தி, உலகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விடயமாகும். நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதற்கு, தேசிய மக்கள் சக்தி தமது பங்களிப்பை வழங்கும்.
“இது புதிய விடயம் ஒன்றல்ல. கடந்த காலத்திலும் தேசிய மக்கள் சக்தி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது. 2015ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியுள்ளது.
“அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஜே.வி.பியின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும்” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கதான் என்று இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசியுள்ள அவர், “எங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார, இந்தியாவுக்கு வெறுமனே செல்லவில்லை. இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்த காரணத்தினாலேயே அவர் அங்கு சென்றுள்ளார்.
“இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார என்று இந்திய ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதன் காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அடுத்த அரசாங்கம் எமது தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி தலைமையிலான அரசாங்கமாகத் தான் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.