பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இரண்டு நாட்கள் விஜயமாக நேற்று (09)
இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்வதற்காகவே, அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு, நேற்று மாலை ராமர் கோவிலில் விஷேட பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அயோத்தி மற்றும் புதுடெல்லியில் தங்கியிருக்கும் போது, நாட்டின் அரசியல் துறையில் உள்ள பல்வேறு நபர்களை தனிப்பட்ட அளவில் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
அவரது அயோத்தி ராமர் கோவில் விஜயம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார மற்றும் மத உறவுகளை வலுப்படுத்துவதில் நாமல் ராஜபக்ஷவின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதாக, அந்த ஊடகச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தேசிய மக்கள் படையின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ எம்.பியின் இந்திய விஜயம் இடம்பெற்று வருகின்றது.
இது ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் என்றும் அதன் கடைசி நாள் நேற்று என்றும் கூறப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயத்தை விமர்சித்திருந்தார்.
ஜே.வி.பியின் அழுத்தத்தினால், இலங்கை பல இந்திய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை இழந்துள்ளதாகவும் அவர் குற்றம்சுமத்தியிருந்தார்.
தற்போது அவர்களின் இந்திய விஜயத்தின் பின்னர், இந்திய முதலீடுகள் இலங்கைக்கு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படாதிருக்குமென்று தான் நம்புவதாகவும், நாமல் குறிப்பிட்டிருந்தார்.
அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவும், எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.