ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் இவ்வருடத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இந்த வருடம் நடைபெறவுள்ளதாகவும் மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, பேர்த்தில் உள்ள இந்திய ஊடகமான WION இன் இராஜதந்திர நிருபர் சிதாந்த் சிபலுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.
மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமாயின, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு, வந்து கடனில் இருந்து மீள்வதே தனது கவனத்தை முதன்மையாக கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என ஊடகவியலாளர் சித்தந்த் சிபல் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,
“நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வந்தேன். அதில் கவனம் செலுத்தி, திவால் நிலையில் இருந்து எங்களை மீட்டெடுப்பதே எனது முதல் கடமை. நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோது, 04 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா கடனாக வழங்கியது. அந்த உதவி கிடைத்திருக்காவிட்டால், இலங்கையால் மீண்டெழ முடியாதிருந்திருக்கும்” என ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்ததுடன், அதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும், ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாட்டை ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு விரைவாக கொண்டு வர முடியும் என்ற எண்ணம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அதில் திருப்தி அடைவதாக தெரிவித்தார்.
இதனை (நாட்டை மீளக் கட்டியெழுப்ப) நிறைவேற்ற முடியும் என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இந்திய ஊடகமான WION க்கு ஜனாதிபதியின் முழு நேர்காணல் கீழே உள்ளது.