சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பங்கேற்றனர்.
மலையக தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார ,கலாசார அபிலாஷைகள் பற்றியே குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான நகர்வாகவே இது உள்ளது என முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் தெரிவித்தனர்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அடுத்தபடியாக கூடுதல் எம்.பிக்களை தமிழ் முற்போக்கு கூட்டணியே அதிக எம்.பிக்கள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியின்கீழ் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள், மலையக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு செயலணி ஒன்று உருவாக்கப்படும். காணி உரிமையும் நிச்சயம் கிடைக்கும். நல்லாட்சியின்போதும் நாம் சொல்லியவற்றை செய்துள்ளோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.