இந்த ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே
ஆதரவளிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன எந்த தீர்மானத்தை மேற்கொண்டாலும் தனது தனிப்பட்ட தீர்மானத்தை எந்த காரணத்துக்காகவும் மாற்றப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை பிரசன்ன ரணதுங்க நிராகரித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குறித்த வேட்பாளருக்கு தாம் ஆதரவளிப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விளக்கமளித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்து தாம் தீர்மானிக்கவில்லை எனவும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பது தொடர்பிலும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தனது சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.