இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்காக
முன்னெடுக்கப்படவுள்ள ஐந்து பயலங்குகளின் இரண்டாவது பயிலரங்கு கண்டியில் நடைபெற்றது.
நேற்று (16-02-2024) ஆரம்பமான இந்தச் இரண்டு நாள் செயலமர்வு இன்றுடன் (17-02-2024) நிறைவுக்கு வருவதோடு, இதில் கேகாலை, மாத்தளை. நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, ஆகிய ஐந்து மாவட்டங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் சர்வமதத் தலைவர்கள் 34 பேரும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக்கான சிறந்த சங்கத்திலிருந்து களுபஹன பியரத்தன தேரர், வல்லத்தர சோபித்த தேரர் மற்றும் வாடுவே தம்மவன்ச தேரர் ஆகியோர் கலந்து கொண்டதோடு உலகத் தமிழர் பேரவையின் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜாவும் பங்கேற்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்தின் சார்பில் விசாகா தர்மதாச மற்றும் அங்கத்தவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த உரையாடலில், களுபஹன பியரத்தன தேரர், நாகர்கோட்டில் பிரகடனம் உருவாகிய வரலாற்றினை உரைத்ததோடு, குறித்த பிரகடனம் சம்பந்தமாக காணப்படுகின்ற கட்டுக்கதைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளித்தார்.
அத்துடன், இந்த உரையாடல்களில் பல்வேறு ஆரோக்கியமான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததோடு, ஈற்றில், பிரகடனத்தின் நோக்கம் மற்றும் உள்ளடக்கத்தினை பலரும் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னதாக முதலாவது பயிலரங்கு குருநாகல் மாவட்டத்திலும் கம்பஹா, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக கடந்த ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் இடம்பெற்றிருந்ததோடு அடுத்தபடியாக மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் வவுனியாவில் பயிலரங்குகள் இடம்பெறவுள்ளதோடு, அதன் அருகில் உள்ள மாவட்டங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இமயமலைப் பிரகடனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில், 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை ஒருங்கிணைப்பாளர்களாக பயிற்றுவிப்பதற்கான ஐந்து பயிலரங்குகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதேவேளை, தேசிய உரையாடலில் மாவட்டம் தோறும் 5 சர்வமத தலைவர்களும் ஒரு சிவில் சமூக உறுப்பினருமாக மாவட்டத்திற்கு தலா 6பேர் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.