இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மீதான அனுதாப பிரேரணை உரை, இன்று (22) நாடாளுமன்றில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
“முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா? அல்லது சாதாரண விபத்தினால் இந்த மரணம் இடம்பெற்றதா என்பதை விரைவாக ஆராய்ந்து, குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
“சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தின் காரணமாகவே அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
“சமூக ஊடகங்களிலும் இது தொடர்பாக விவாதம் இடம்பெற்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை விரைவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சதி திட்டம் இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த அனுதாப உரையில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என்றார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறக்கும் வரை பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார். அரசியல்வாதிக்கு இது மிகவும் கடினமான விடயம் என ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இந்த இரங்கல் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.