1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

வலியுறுத்தி, தமிழக மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

“தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வருவதாகச் சொல்லி இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து வருகிறது.

அப்படித் தான் கடந்த பெப். 4இல் இரண்டு விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 23 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. அவர்களில் இரு மீனவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனையும் மற்றொரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது மட்டுமின்றி அவர்கள் படகுகளையும் நாட்டுடைமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சில தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடும் நிலையில், இந்த தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் தான் இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாகக் கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணிக்கத் தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திர ரீதியாகத் தலையிட வேண்டும் என்றும் மீனவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே இந்த மீனவர்களை விடுவிக்கக் கோரியும் இலங்கையின் புதிய சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நேற்றிரவு ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கச்சிமடத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்டு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி