ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சொற்ப அளவிலானவர்கள் மட்டுமே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு
கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் பெற்றுக்கொண்ட சொற்ப அளவிலானவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலளார்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்ய வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு கிடையாது. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.
“யார் என்ன சொன்னாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி ஒன்றின் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி. யாரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து கருத்து வெளியிடும் உரிமை கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்டு.
“எனினும் வேறு கட்சிகளில் இவ்வாறு கருத்து வெளியிட்டால் அவர்களது கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்படும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.