அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு
முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஷரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க முடியாது என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தவறெனத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, சிரான் குணரட்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
கடந்த பொதுத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருந்தார்.
எனினும் கோட்டாபய அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியிருந்தார்.
அதனையடுத்து முஷரப்பின் கட்சி அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் வழக்கொன்றைத் தொடுத்திருந்தார். இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து முஷாரப் எம்.பி நீக்கப்பட்ட முறைமை தவறானதென தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்கவும் மறுப்புத் தெரிவித்துள்ளது.