காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்ட 30 சந்தேக நபர்களும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளியான
செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி.பி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் அதிகாலை நடைபெற்ற சுற்றிவளைப்பில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த பகுதிக்கு அதிகளவிலான இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி.பி.கஜநாயக்க தெரிவித்ததாவது,
"காத்தான்குடியில் இன்று மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எமக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் உடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சஹ்ரானின் உறவினர்களும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த தரப்பினர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நாளைய தினம் காத்தான்குடி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம், கைது செய்யப்பட்ட 30 பேரும் ஒப்படைக்கப்படவில்லை. இது தொடர்பில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை” என தெரிவித்துள்ளார்.