இந்தியாவின் நயவஞ்சகத்தால் சாகடிக்கப்பட்ட ஈழத்தமிழன் சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திர ராஜாவின்
பூதவுடல் இன்னமும் குடும்பத்தினரின் கையில் கிடைக்கவில்லை. மீள் மரண விசாரணையைத் தொடர்ந்து மீள் பிரேத பரிசோதனையை நடத்துவதில் நீர்கொழும்பு வைத்தியசாலை நிர்வாகம் தாமதம் காட்டுகின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து நேற்றுப் பகல் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பூதவுடலைப் பெறுவதில் தாமதம் நிலவியது.
நீண்ட இழுபறியில் பின்னர் சாந்தனின் பூதவுடலை விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் மாலை வேளையிலேயே மீள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குப் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.
பூதவுடலை நேற்று இரவு பார்வையிட்ட நீதிவான், சாந்தனின் இரத்த உறவுகள் இருவர் முன்னிலையில் மீள் மரண விசாரணைகளை முன்னெடுத்த பின்னரே மீள் பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதற்கமைய இன்று மீள் மரண விசாரணையைத் தொடர்ந்து மீள் பிரேத பரிசோதனையை நடத்துவதில் நீர்கொழும்பு வைத்தியசாலை நிர்வாகம் தாமதம் காட்டி வருகின்றது.
எனினும், இன்று மாலை பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று நீர்கொழும்பு வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பூதவுடல் தமது கையில் கிடைத்த பின்னர்தான் இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் அறிவித்தலை வழங்க முடியும் என்று சாந்தனின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.