வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெறும் என்று கோயிலின் செயலாளர்
துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கோயில் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வவுனியா நீதிமன்றிற்கு நேற்றைய தினம் (04) சமூகம் அளித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“குருந்தூர் மலை விஹாராதிபதி, எமது கோயிலை இலக்காக வைத்து சில கடும்போக்குவாதிகளை அழைத்துக்கொண்டு அண்மையில் கோயிலுக்கு வருகை தந்திருந்தார்.
‘அவர் எதிர்வரும் சிவராத்திரி தினத்தன்று மக்களை அணிதிரட்டி அதனை குழப்பும் விதமான கருத்துக்களை முகநூலில் பகிர்ந்துள்ளார். இவ்வாறு அவர் நடந்துகொள்கின்றமை மிகவும் வருத்தம் அளிக்கின்றது.
“வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயிலானது, தொன்று தொட்டு எமது மக்களால் வழிபடப்பட்டுவந்த ஒரு கோயில். பௌத்த கடும்போக்குவாதிகளின் தூண்டுதலின் பெயரிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிகின்றது.
“இருப்பினும் எதிர்வரும் மகா சிவராத்திவிழா மிகவும் சிறப்புற இடம்பெறும் என அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்” என்றார்.
வவுனியா - வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய தினம் (04) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கோயில் நிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.
எனினும், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த முற்பட்டால் அதற்கு நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி காவல்துறையினரால் கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து வவுனியா நீதிமன்றில் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான விசாரணைகள் நேற்றையதினம் தினம் (04) மன்றில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது விடயங்களை ஆராய்ந்த நீதவான், வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுவதற்கு கட்டளை வழங்கப்பட்டது.
இதேவேளை, வெடுக்குநாறிமலை கோயிலில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உத்தரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.