ரணில் விக்கிரமசிங்க எப்படி கார்ட்டூனிஸ்டுகளின் கண்ணில் பட்டார் என்பதை விளக்கும் "PRESS VS PREZ" நூல், இன்று (07) பிற்பகல்
கொழும்பு தாமரைத் தடாகத் திரையரங்கில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக, 2021 ஜூன் முதல் 2023 மே வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் குறித்து பத்திரிகை கார்ட்டூனிஸ்டுகள் தொகுத்த புத்தகமாக இது வெளியிடப்படுகிறதென, அந்நூலின் ஆசிரியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
மேலும், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையும் வரிசை யுகத்தையும், நம்பிக்கையிழந்த நாட்டையும், தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு மீட்டெடுத்தார் என்பதையும் அதனை, ஊடகவியலாளர்கள் மற்றும் கார்ட்டூனிஸ்டுகள் எவ்வாறு பார்த்தார்கள் என்பதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை மீட்கும் திட்டத்திற்கு, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சி கார்ட்டூனாக உருவாக்கப்பட்ட விதமும் இதில் அடங்கியுள்ளது.
மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிரஞ்சன் குணவர்தன ஆங்கில மொழிபெயர்ப்பையும் சிங்களப் பதிப்புகளை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் மற்றும் ஊடகவியலாளரான சி.ஜே. அமரதுங்கவும் மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா விடயமும் கார்ட்டூன்கள் மூலம் இந்த படைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற நூலும், இன்று (07) வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.