பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையில், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள பிரதமர் அலுவலக வளாகத்தில் வாக்குவாதமொன்று ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது ரோஹித்த எம்.பி தன்னைத் தாக்க முற்பட்டதாக, சாணக்கியன் எம்.பி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார் என்றும் பிரதமரின் அலுவலகம் செல்லும் வழியில், “நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம்?” என்று கூறி தாக்க முற்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனது சிறப்புரிமை மீறியமைக்காக, பாராளுமன்றத்தில் எனது வாக்குமூலம் பதியப்பட்டது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.