கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில, இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்
படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை இரவு, தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில், தாய் அவரது 4 குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது, 35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா என்ற பெண் மற்றும் 7 வயது, 4 வயது, 2 வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தைகளே உயிரிழந்துள்ளனர். குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சே என்ற நபரும் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த 6 பேரும், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அத்தோடு, குறித்த குழந்தைகளின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க, பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், 19 வயதான ஃபெப்ரியோ டி-சொய்சா என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக 6 முதல்நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபர், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். இவர், இலங்கைப் பிரஜை எனவும் மாணவராக கனடாவில் தங்கியிருந்தார் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மேற்படி சந்தேகநபரும் குறித்த குடும்பத்திற்கு அறிமுகமானவர் எனவும் அவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், குற்றவாளி வியாழகிழமையன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவருக்கு எதிரான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.