மகளிர் தினத்தையிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது.
மகளிர் தினத்தையிட்டும் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஏழு வருட பூர்த்திக்கு ஆதரவு தெரிவித்தும், இன்று இப்போராட்டத்தை மேற்கொண்டதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்தின் போது, “இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்?”, “நீதி தேவதை ஏன் கண்மூடி விட்டாய்?”, “சர்வதேசமே! இன்று பெண்கள் தினமா, பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?”, “முடிவில்லா துயரம்தான் தமிழ்த் தாயின் தலைவிதியா?”, “55ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா?”, “காலஅவகாசம் வேண்டாம்: முறையான நீதி விசாரணையே வேண்டும்”, “பெண்கள் நாட்டின் கண்களா, இல்லை கண்ணீருக்கான கண்களா?” போன்ற பல்வேறு வாசகங்கள் பதியப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த உறவினர்கள், தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுரு செறாட் ஜெயவர்த்தன உள்ளிட்ட குழுவினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.