சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பில் பேசுவதற்காக
எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட அழைப்பை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் கட்சியின் கருத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த முறை இலங்கைக்கு வந்திருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர், அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததைப் போன்று, இம்முறையும் அவர்களுடன் கலந்துரையாடத் தயாராக இருக்கிறார் என்று தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, அவ்வாறில்லாமல் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அராங்கம் நடத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கி, அவர்கள் அழைக்கும் கலந்துரையாடலில் கலந்து கொள்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஐமசவின் பொருளாதார விவகாரங்களின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா, அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும், அதற்காக அனைத்து தரப்பினரின் கூட்டுப் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.