1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விரைவில்

விடுவிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ள அமைச்சர் மேலும் கூறுகையில்,

“முப்படையினரும் மக்களுக்காகத்தான் சேவை செய்கின்றனர் என இங்கு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே எனது கருத்து இதுவாகத்தான் இருந்தது.

“அதாவது பாதுகாப்பு தரப்பினர் எமது மக்கள் படையாக மக்களுக்கான படையாக செயற்படுவர் என்றும் செயற்பட வேண்டும் என்ற கருத்தை நான் முன்வைத்திருந்திருக்கின்றேன். இதேநேரத்தில் எமது மக்களது இன்னும் பல காணிகள் விடுவிக்கப்பட வேண்டியிருக்கின்றன.

“நிச்சயமாக அந்தக் காணிகளும் விடுவிக்கப்படும். அதாவது காணி விடுவிப்பு என்கின்றபோது முப்படை மற்றும் பொலிசார், வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். இதேநேரம் 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தவாறு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெளிவாக கூறியிருக்கின்றார்.

“அதனடிப்படையில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் அவ்வாறான காணிகள் விடுவிக்கப்படும் என்றும் நான் முழு நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கைளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியும் ஆகிய சாகல ரத்நாயக்க கலந்துகொண்டு காணிப் பத்திரங்களை வழங்கிவைத்தார்.

இதில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரட்ன, ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள், பாதுகாப்பு படையினர்கள், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி