சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் பகிரங்கப்படுத்தப்படாததற்கான காரணங்களைக் காட்டும் பகுப்பாய்வுத் தரவுகளை
வெளியிடுவதாக ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரேயொரு எதிர்க்கட்சி உறுப்பினர் வாக்குறுதியைப் பெற்றுள்ளார்.
'சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முக்கியமான கூட்டம்' என்று கூறி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்டிருந்த கூட்டத்திற்கான அழைப்பை, முழு எதிர்க்கட்சியினரும் புறக்கணித்தனர்.
மார்ச் 11ஆம் திகதி இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ‘எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், கட்சித் தலைவர் அல்லாத இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் பணியகம் தெரிவித்திருந்தது.
"நாங்கள் கவலைப்படும் பல பிரச்சினைகளை நான் எழுப்பினேன். தொழில்நுட்ப உதவி அறிக்கைகள் (Technical Assistance Reports) IMFஇனால் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. அவற்றில்தான் முக்கியமான பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. இது குறித்து நாட்டுக்கு அறிவிக்கப்படவில்லை. அவற்றை எனக்கு வழங்குவதாக ஜனாதிபதி இணங்கினார். எதிர்க்கட்சியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்கள் கோரினால், அவர்களுக்கும் வழங்கப்படும். அதனைப் பார்த்த பின்னரே இந்த வேலைத்திட்டத்திற்கு உதவ முடியுமா இல்லையா என்பதை கூற முடியும்” என, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி பணியகத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சுமந்திரன் எம்.பி, தான் கட்சி பிரதிநிதியாக அல்லாமல் ஜனாதிபதியின் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.