மொட்டுக் கட்சியைச் சேர்ந்த சிலர், வேகத்தில் பக்கம் மாறத் தொடங்கியுள்ளனர். மேல் மாகாண சபையின் முன்னாள் மொட்டு
உறுப்பினர் குணசிறி ஜயநாத், லன்சா தரப்பின் புதிய கூட்டணியில் இணைந்துள்ளார். அவர், அண்மையில் அந்த கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அதன் ஸ்தாபகரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் லன்சா ஆகியோரை சந்தித்து, எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியதாக ராஜகிரிய கட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அவர் அண்மையில் தெல்கொடவில் உள்ள தனது வீட்டில் புதிய கூட்டணியின் பியகம தொகுதி சபையைக் கூட்டினார். அங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பம் காரணமாகத் தமக்கு நேர்ந்த அரசியல் அநீதிகளையும் மொட்டுவின் தற்போதைய வேலைத்திட்டத்தையும், அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க, புதிய கூட்டணியின் கட்சி காரியாலயத்தின் செயற்பாட்டுத் தலைவர் உள்ளிட்ட சிலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், லன்சா தரப்பின் புதிய கூட்டணி தொடர்ந்தும் ராஜபக்ஷர்களை குறிவைத்து களமிறங்கியுள்ள நிலையில், பெசிலும் கேமுக்கு இறங்கியுள்ளார்.
பொஹொட்டுவவை விட்டு வெளியேறிய தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க தலைவர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கான அவசர வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமென, அண்மையில் மொட்டுக் கட்சியின் உயர் அதிகாரிகளுக்கு பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில், மொட்டுக் கட்சியைச் சுற்றியுள்ள பல தொழிற்சங்கங்கள் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகள், லன்சா தரப்பின் புதிய கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, மொட்டுக் கட்சியின் தொழிற்சங்க இயக்கம் பாரியளவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், அதனைத் தடுத்து நிறுத்தி எப்படியாவது தொழிற்சங்கப் பணிகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே, நெலும் மாவத்தை கட்சி அலுவலகம் இந்நாட்களில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. புதிய கூட்டணியில் இணைந்த தொழிற்சங்கத் தலைவர்களுக்கு மீண்டும் வருமாறு நாளொன்றுக்கு அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அறியமுடிகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாலர் பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க ஸ்ரீநாத், மொட்டுவில் இனியும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு இல்லை என்றார். நிமல் லன்சா, அமரசிங்க தரப்புகள், ராஜபக்ஷர்கள் இருக்கும் திசையைக்கூட திரும்பிப் பார்க்காத அளவுக்கு மாறிவிட்டனர். வரும் ஃபோன் கோல்களில் மட்டும் ஆட்டம் போடுவது கடினம் என்கிறார் இந்த இருவருடனும் நெருங்கிய தொடர்புடைய தரப்பினர்.