வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும் மத வழிபாட்டை உறுதி செய்யுமாறும் இன்றைய தினம்
பாராளுமன்றத்தில் வட கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினால், கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அதரவாக குரல் கொடுத்திருந்தார்.
“குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற பேரினவாதத்தின் ஒரு விடயமாகவே வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (08) வழிபாட்டுக்கு சென்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
“இது உண்மையிலேயே கவலைக்குரிய ஓர் விடையம். ஏனெனில் மத வழிபாடு என்பது மத உரிமை என்பது எங்களுடைய இலங்கை யாப்பின் முக்கியமான அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது.
“அவ்வுரிமையே எமது மக்களுக்கு மறுக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் அரச சார் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மௌனம், அவர்களும் இவற்றுக்கு ஆதரவாக செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் மிக விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் வலியுறுத்தப்பட்டது.