ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டம், அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில், இன்று (20)
காலை 10.00 மணிக்கு, பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே வேட்பாளராக முன்நிறுத்த வேண்டுமென, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலரும் கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், ஜனாதிபதிக்கான வேட்புமனுவை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் என அக்கட்சியின் மற்றுமொரு குழு கூறுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வது தொடர்பாகவும் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சியில் இணையவுள்ள எம்.பிக்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.