கோப் குழுவின் தலைவர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார இன்று
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்
இதன்போது இந்த நியமனம் கோப் குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோப் குழுவில் இருந்து 8 உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், கோப் குழுவின் தலைவர், அப்பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால் உண்ணாவிரதத்தில் ஈடுபட நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன அண்மையில் நியமிக்கப்பட்டதுடன், அந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கோப் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய ரோஹிதவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி ஊழல்,மோசடி மற்றும் விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு சட்டவிரோத நிதிச் சொத்துக்கள் பிரிவிடம் அதிகாரகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளது.
1997ம் ஆண்டு பிரதேச சபை உறுப்பினராக தெரிவான ரோஹித இதுவரையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் எனவும் இந்தக் காலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
ரோஹிதவின் வங்கி கணக்குகள், அவருக்கு நெருக்கமானவர்களின் வங்கிக் கணக்குகள் என்பன கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டுமென முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.